வெளியீடுகள்

கடந்த இரு தசாப்தங்களாக மாமன்றம் வெளியீட்டுத்துறையில் செய்துவரும் பணிகளை எமது மக்கள் பாராட்டி வருகின்றார்கள். அவர்கள் தரும் அந்த ஊக்கத்திலே மாமன்றம் இந்து மக்களின் சமய அறிவினை விருத்தி செய்ய இவ்வெளியீடுகள் மூலம் நல்லதொரு பணியை ஆற்றுகின்றது என்பதனை திருப்தியுடன் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறோம்.

20 வருடங்களுக்கு மேல் “இந்து ஒளி” சஞ்சிகை ஒழுங்காக வெளிவந்து கொண்டிருக்கிறது. காலாண்டிதழாக சுடர்விட்ட இந்து ஒளி சமீபகாலத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருவதுடன் சில விசேட சிறப்புமலர்களும் வெளி வருகின்றன. தவத்திரு யோகர் சுவாமிகளின் 50வது ஆண்டு குருபூசை சிறப்புமலர் கூடப் பலரினதும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

வைரவிழாவையொட்டி 2016இல் “இந்து ஒளி வைரவிழா மலர்” இரு பாகங்களாக வெளிவந்தது. அவ் வைரவிழா மலரில் வெளிவந்த கட்டுரைகளும் ஆக்கங்களும் மிகவும் முக்கியமானது. கருத்தாழம்மிக்க இம்மலர்; எம்மக்களிடையே சிறந்த வரவேற்பைப்; பெறுகின்றது.

ஆன்மீக மடலை ஒவ்வொரு இதழுக்கும் அனுப்பி எமக்கு வழிகாட்டும் ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் இந்த சிறப்பு மலருக்கும் ஆன்மீக வழிகாட்டியதோடு வெளிநாடுகளிலும் இச் சிறப்பு மலர் வெளிவர வழிவகுத்தமையை நன்றியுடன் நாங்கள் குறிப்பிட வேண்டும். சில ஆலயங்களின் கும்பாபிஷேகங்கள், சர்வதேச இந்து சகோதரத்துவ மாநாடு, மகா சிவராத்திரி, நயினை நாகபூஷணி அம்மன் ஆலய மகோற்சவம், கதிர்காமக் கந்தன் உற்சவம், நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம் போன்றவற்றை முன்னிட்டும் இந்து ஒளி சிறப்பு மலராக மலர்ந்து இருக்கிறது.